ரூ.30,000 பென்சன் வாங்கிய தாய்... சொத்துப் பிரச்னையால் வீட்டுக்குள் சிறை வைத்த மகன்கள் கைது!

தஞ்சாவூர், காவிரி நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் ஞானஜோதி (62). இவர் கணவர் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர். 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் இருந்த நிலையில், மகளும் இறந்து விட்டார். ஞான ஜோதியின் மூத்த மகன் சண்முகசுந்தரம் சென்னையில் தொழில்நுட்பப் பிரிவு இன்ஸ்பெக்டராகவும், இளைய மகன் வெங்கடேசன் தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும் முக்கிய பொறுப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மீட்கப்பட்ட ஞானஜோதிக்கு ஆறுதல் கூறிய மேயர் சண்.ராமநாதன்

இருவருமே பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சகோதரர்கள் இருவருக்கும் இடையே குடும்ப சொத்து தொடர்பாகப் பிரச்னை இருந்து வந்திருக்கிறது. இதனால் இரண்டு பேருமே தாயை கவனிக்கவில்லை. மேலும், இருவரும் காவேரி நகரில் உள்ள வீட்டில் சுமார் பத்து ஆண்டுகளாக தனிமைப்படுத்தி அடைத்து வைத்து வந்துள்ளனர்.

மீட்கப்பட்ட தாய்

அந்த வீட்டில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமலும், உடுத்த உடை, உணவு உள்ளிட்டவை முறையாக வழங்கப்படாமலும் மகன்கள் இருவரும் தங்கள் தாயை பரிதவிக்க விட்டிருக்கின்றனர். சகோதரர்கள் இருவரும் வேறு இடத்தில் வசித்து வருவதால், எப்போதாவது சாப்பாடு கொண்டுவந்து கேட்டுக்கு வெளியிலேயே நின்றபடி கொடுத்துவிட்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கின்றனர். மேலும், அருகாமையில் உள்ள ஒருவர் வீட்டில் பிஸ்கட் பாக்கெட்டுகளை கொடுத்துவைத்து, ``எங்க அம்மாவுக்கு தினம் ஒரு பிஸ்கட் பாக்கெட் தூக்கி போடுங்கள்..!" என்றும் கூறியிருக்கின்றனர்.

பசியின் வலியை விட பெற்ற மகன்கள் கவனிக்காத வலி ஞானஜோதியை வேதனைகுள்ளாக்கியிருக்கிறது. சாப்பாடு இல்லாததால் பல நேரம் பசியால் மண்ணை குவித்து வைத்து அதையே அந்த முதிய தாய் சாப்பிட்டதாகவும் சொல்லப் படுகிறது. இந்த நிலையில் சமூக ஆர்வலரான சுரேஷ் என்கிற ஜெயசந்திரன் எதேச்சையாக அந்த வீட்டுக்குள் சென்று பார்த்திருக்கிறார். அப்போது, பொட்டு துணி கூட இல்லாமல் நிர்வாணமாக எலும்பும், தோலுமாக அந்த தாய் சுருண்டு கிடந்ததைக் கண்டு பதறியிருக்கிறார்.

தாய்

அதையடுத்து, உடனடியாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் கவனத்துக்கு இதை கொண்டு சென்றுள்ளார். ஆட்சியர், மாவட்ட சமூக நல அலுவலர்களிடத்தில் இதனை தெரிவித்துடன் உடனடியாக ஞானஜோதியை மீட்க உத்தரவிட்டுள்ளார். ஞானஜோதியை மீட்கச் சென்ற அலுவலர்களை அவரின் மகன் சண்முகசுந்தரம் கடுமையாகப் பேசியிருக்கிறார். மாவட்ட சமூகநல அலுவலர் ராஜேஸ்வரியை ஞானஜோதியின் இளையமகன் வெங்கடேசன் போனில் தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்.

இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு செல்ல போலீஸ் பாதுகாப்புடன் அந்த மூதாட்டியை மீட்டு, அவரின் இரண்டு மகன்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யவும் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து மாவட்ட சமூக நல அலுவலர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று ஞானஜோதியை மீட்டனர்.

மூத்த மகன் சண்முகசுந்தரம்

மீட்க்கப்பட்ட ஞானஜோதியை தனி அறையில் வைத்து பாதுகாப்பாக சிகிச்சை கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன் மருத்துவக்கல்லூரிக்கே சென்று அவரைப் பார்த்து பரிவு காட்டினார். மாநகராட்சிக்கு சொந்தமான முதியோர் இல்லத்தில் வைத்து வாழ்நாள் முழுவதும் பாதுக்கப்படுவார் என கூறி அந்த மூதாட்டியை நெகிழ வைத்தார்.

இதற்கிடையில் அவரின் இரண்டு மகன்களும், ``எங்க அம்மாவை எங்களுக்கு பாத்துக்க தெரியும்... டிஸ்ஜார்ஜ் செய்யுங்க" என்று சத்தமிட்டுள்ளனர். கிட்டதட்ட பத்து ஆண்டுகளாக மகன்களால் தவிக்கவிடப்பட்ட தாய் குறித்த செய்தி பலரையும் கலங்க செய்தது. ஆனால் அவர் மகன்களுக்கு அது குறித்த கவலையே இல்லாமல் போனதுதான் வேதனையின் உச்சம். மாதம் சுமார் ரூ.30,000 பென்சன் வாங்கும் அவரை ராணி போல் ஹோமில் வைத்து கூட பராமரித்திருக்கலாம். ஆனால், அதை செய்ய அவர்களுக்கு மனமில்லாமல் போனதே இந்த துயரத்திற்கு காரணமாக அமைந்தது.

இளைய மகன் வெங்கடேசன்

தாயை கவனிக்காமல் வீட்டு சிறையில் வைத்து கொடுமை படுத்தியது, மீட்கச் சென்ற அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் பேசியது உள்ளிட்ட பல காரணங்களால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சகோதரர்களான சண்முகசுந்தரம், வெங்கடேசன் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/EeYvlS9

Post a Comment

0 Comments