விஷ ஊசி போட்டு கணவரைக் கொல்ல முயற்சி - சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 3 திருமணம் செய்த மனைவி கைது

திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் அருகே தோட்டத்துபாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி (52). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லைச் சேர்ந்த தேவி (35) என்பவரை திருமணம் செய்தார். தேவி, சுப்பிரமணியிடம் இங்கிருக்கும் சொத்தை விற்றுவிட்டு திண்டுக்கல்லில் சென்று வாழலாம் எனத் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு அவர் சம்மதிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால், கடந்த 15-ம் தேதி சுப்பிரமணியின் காலில் தேவி விஷ ஊசி செலுத்தி உள்ளார்.

இதில், சுயநினைவை இழந்த சுப்பிரமணியை, ஈரோடு தனியார் மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தேவி தலைமறைவான நிலையில், இது தொடர்பாக சுப்பிரமணி குன்னத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிந்து தேவியை தேடிவந்தனர்.

சித்தரிப்பு படம்

அவரின் செல்போன் சிக்னலை கொண்டு போலீஸார் விசாரித்ததில், சுப்பிரமணி இல்லத்தில் இருந்து தப்பிய தேவி, நாமக்கல்லில் ஆண் நண்பர் ஒருவரை திருமணம் செய்துள்ளார் எனத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வாழ்ந்து வந்தவரை, தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

இது தொடர்பாக குன்னத்தூர் போலீஸார் கூறுகையில், ``திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே அய்யம்பட்டியைச் சேர்ந்தவர் தேவி. பெற்றோர் இல்லை. முத்துகுமார் என்பவரை முதலில் திருமணம் செய்துள்ளார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அவரிடம் இருந்து பிரிந்து, சுப்பிரமணியை 2-ஆவது திருமணம் செய்துள்ளார். சுப்பிரமணியிடம் சொத்தை தன் பெயருக்கு கேட்டுள்ளார். ஆனால் அவர் தராத ஆத்திரத்தால், சர்க்கரை வியாதி இருந்த சுப்பிரமணிக்கு, ஊசி வழியாக களைக்கொல்லியை உடலில் செலுத்தி கொல்ல முயற்சித்துள்ளார் .

Injection

இதில் சுப்பிரமணிக்கு வலிப்பு ஏற்பட்டு நினைவை இழந்துள்ளார். இதனால், பயந்த தேவி, நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கு சென்றுள்ளார். அங்கு ஆண் நண்பரான ரவிக்குமாரை சந்தித்து, இத்தனை நாள் தான் திண்டுக்கல் பெண்கள் விடுதியில் தங்கி வேலை செய்து வந்ததாகவும், நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி கடந்த 27-ஆம் தேதி ரவிக்குமாரை 3-ஆவது திருமணம் செய்துள்ளார்.

திருமணம் செய்து ஆண்களை ஏமாற்றி, சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டுள்ளார். அதன்படி சுப்பிரமணியிடம் இருந்த 80 சென்ட் தோட்டத்தை வாங்கிக்கொண்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் சுப்பிரமணி ஒத்துக்கொள்ளாத நிலையில், விஷ ஊசி போட்டு எழுதி வாங்க முயன்றுள்ளார். யாருடைய துணையுமின்றி, அவர் இதனை தனியாக செய்து வந்திருப்பதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றனர்.



from Latest News https://ift.tt/HVF6xXC

Post a Comment

0 Comments