``ரூ.350 கோடிக்கு மேல் செலவு... தேர்தலுக்கு பயந்த திமுக, காங்கிரஸ்" - ஜெயக்குமார் விளாசல்

``ஈரோடு கிழக்குத் தொகுதியில் எங்களின் தோல்வி என்பது தோல்விகரமான வெற்றி” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். சென்னையில் நடந்த திருமணவிழா ஒன்றில் கலந்துக்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஓ.பி.எஸ் தொடுத்திருக்கும் மேல்முறையீட்டு வழக்கிற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் கட்சியில் தலைமை கழக நிர்வாகிகளிலிருந்து முன்னாள் அமைச்சர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள் வரை ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒற்றுமையாகத்தான் செயல்படுகிறோம்.

காமாலைக்காரர்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போல, எங்களைப் பார்ப்பவர்களின் பார்வைதான் முக்கியம். தற்போது கட்சியின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாகவும், வீரியமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடை தேர்தலை பொறுத்தவரை ஆளும் அரசின் பயத்தால்தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. ஏறக்குறைய 350 முதல் 400 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து, ஒரு போலியான வெற்றியை பெற்றிருக்கிறார்கள்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலை சந்திப்பதற்காக தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலினும், காங்கிரஸ் கட்சிக்காரர்களும் எந்த அளவு பயந்துக்கொண்டிருந்தார்கள் என்பது அவர்களுடைய மனசாட்சிக்கு தெரியும். எனவே, கடந்த 22 மாதங்களில் கொள்ளையடித்த பணம், இந்த தேர்தலில் செலவழிக்கப்பட்டிருக்கிறது. பணம் பாதாளம் வரை பாயும். இங்கேயும் அதுதான் நடந்திருக்கிறது. எங்களைப் பொருத்தவரை எங்களுக்கு இது வெற்றிகரமான தோல்விதான்" எனத் தெரிவித்திருக்கிறார்.



from Tamilnadu News https://ift.tt/YSZ9DuI

Post a Comment

0 Comments