`பெரியார் வைத்த பெயர்' வி.சி.கணேசன் டு சிவாஜி கணேசன்; நடிகர் திலகம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!

சிவாஜி...மொத்த இந்திய சினிமாவிற்கே சிவாஜி கணேசன் தான் திறந்த வெளிப்பல்கலைக்கழகம். அனைத்து நடிகர்களும் இவருக்கே ரசிகர்களாய் இருப்பது தான் நடிகர் திலகத்தின் பெருமை. அந்த சமுத்திரத்தில் விழுந்து கிடந்த போது கிடைத்த முத்துக்கள் இவை.

* வி.சி.கணேசனை மராட்டிய வீரன் சிவாஜியாக மேடையின் கீழே இருந்து பார்த்தார் தந்தை பெரியார். உடனே மேடையின் மேல் ஏறி நீயே சிவாஜி என தீர்ப்பு வழங்கினார். அன்று முதல் தான் சிவாஜி கணேசன்.

* விநாயகர் மீது ஐயாவுக்கு ஸ்பெஷல் பக்தி. சிறு வெள்ளியிலான பிள்ளையார் சிலையை எப்போதும் கூடவே வைத்திருப்பார். அவரது எல்லா பிரார்த்தனைகளிலும் விநாயகர் இடம்பெறுவார். வீட்டிற்கு முன்புகூட பிள்ளையார் சிலை தான்.

* பல தடைகளை மீறி கதாநாயகனாக அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பெருமாள் வீட்டிற்கு ஒவ்வொரு பொங்கலுக்கும் போய் ஆசி பெற்று பரிசுப் பொருட்களை கொடுத்து வருவார். அவரின் வீட்டு விசேஷங்களுக்கு அவர்தான் வரவேற்பாளர். இது பிரபு காலம் வரைக்கும்கூட நீடிக்கிறது.

சிவாஜி கணேசன், தந்தை பெரியார்

*  301 படங்களில் நடித்து விட்டார். சிவாஜி தெலுங்கு, மலையாளம், இந்தி என மூன்று மொழிகளிலும் நடித்திருக்கிறார். தமிழ் படங்களின் எண்ணிக்கை 270. கௌரவத் தோற்றத்தில் 19 படங்கள் செய்திருக்கிறார். எம்ஜிஆர் ரோடு கூண்டுக்கிளி என ஒரே படம்தான்.

* ஜெயலலிதாவை அம்மு எனவும் எம்ஜிஆரை அண்ணா எனவும் கலைஞரை மூனா கானா எனவும் அழைப்பார். மற்றவர்களை அவர் அழைப்பதெல்லாம் அவரது பிரியம் சார்ந்தது தான்.

*  இரத்தத் திலகம் படத்தில் பிரமாதமாக நடித்து ஸ்டைலில் கவனம் பெற்றார். அதற்காக சென்னை சினிமா ரசிகர் மன்றம் அவருக்கு கொடுத்தது ஒரிஜினல் துப்பாக்கி.

*  பொங்கலுக்கு முன்தினம் தயாரிப்பாளர் பெருமாள் அவர்களை பார்த்துவிட்டு அப்படியே குடும்பத்தோடு சொந்த ஊரான சூரக்கோட்டைக்கு போய்விடுவார். அங்கே தான் பொங்கல் கொண்டாட்டம் அதகளப்படும். ஒவ்வொரு பொங்கல் அன்றும் சினிமா விருந்தினர்கள் நான்கு பேராவது கலந்து கொள்வார்கள்.

* அண்ணன் தம்பி குடும்பத்தோடு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தார் சிவாஜி. அதில் அவர் சமரசம் செய்து கொண்டதே இல்லை. அவரது வீட்டு நிர்வாகம் கால்ஷீட் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டது அவரது தம்பி சண்முகம் தான்.

* நேரம் தவறாமல் இருப்பதில் சிவாஜியை மிஞ்ச முடியாது. ஏழு மணிக்கு படப்பிடிப்பென்றால் ஆறேமுக்கால் மணிக்கு ஒப்பனையோடு ஆஜர் ஆகிவிடுவார். நடித்தபோது ஒரு நாள் கூட தாமதித்து வந்ததாக வரலாறு இல்லை.

*  யானைகளின் மீது தனித்த பிரியம் கொண்டவர். தஞ்சை மாரியம்மன் கோவில், திருப்பதிக்கு யானைகளை பரிசாக அளித்திருக்கிறார். யானையிடம் பயப்படாமல் விளையாடிக் கொண்டிருப்பார். யானைகளும் அவரிடம் செல்லம் கொஞ்சும்.

சிவாஜி கணேசன்


* கடிகாரங்கள் சேகரிப்பதில் சிவாஜிக்கு அலாதி பிரியம். அவர் இறக்கும்போது 2000 க்கு மேல் கடிகாரங்கள் இருந்தன.

* தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி தோட்டத்தில் சிலை வைத்து கௌரவித்தார். அந்தச் சிலையை திறந்து வைத்தது வேறு யாருமல்ல. இன்னொரு தாய் பாசம் கொண்ட எம்ஜிஆர் தான்.

* சிவாஜியின் கனவு வேடம் தந்தை பெரியார் வேடத்தில் முழுமையாக பாத்திரமேற்று நடிப்பது. கடைசி வரைக்கும் ஏனோ அது நிறைவேறவே இல்லை.

* கேரம்போர்டு விளையாட்டில் அவருக்கு அலாதி பிரியம். கிரிக்கெட் நிலவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பார்.

*  நடிகர் திலகம் போட்ட முதல் வேடம் பெண் வேடம்தான். அதுவும் உப்பரிகையின் மீது நின்று ராமனை பார்க்கும் சீதை வேடம்.
 



from Latest news https://ift.tt/T95XaGJ

Post a Comment

0 Comments